எரிபொருள் விற்பனை நிலையங்களில் பெற்றோல் விநியோகம்; அரசாங்க அதிபர் நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தொலைபேசி ஊடாக நேற்று(03) கலந்துரையாடினார்.
இதன் போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று(04) பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இதன் மூலம் வரிசையினை கட்டுப்படுத்தலாம் எனவும் அரசாங்க அதிபர் யோசனை தெரிவித்திருந்தார்.
அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய, கொலன்னாவையிலிருந்து நேரடியாக எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் நாளை மட்டும் 310,200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எனவும், இவ் விநியோகம் தொடர்பில் வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர் சிவகரனுடன் அரசாங்க அதிபர் தொடர்பு கொண்டு, நாளைய விநியோக நடவடிக்கையினை ஒழுங்குபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார். அதன் பிரகாரம் வட பிராந்திய முகாமையாரால் விநியோகப் பட்டியல்  தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ் விடயம் தொடர்பில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கும் அரசாங்க அதிபரால் கொண்டுவரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *