மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி அபாய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணிக்க வழங்கப்படும் நிதியை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு அதி அபாயப் பகுதிகளில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் கீழ், பயனாளிகள் தாங்களே வீடுகளை நிர்மாணிக்கும் முறையில் அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருகிறது.
இதுவரை ஒரு வீடு நிர்மாணிப்பதற்காக அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

