முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவற்குட்பட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைது செய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (03) ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸாரிடம் வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.
இத்தகைய சூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் தாக்கிய நபரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைது செய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.
அந்தவகையில் குறித்த நபர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

