தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு, இந்திய அரசின் உயர் விருதுகளில் ஒன்றான, பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின், கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்தவகையில், இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கும், தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர் ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் புதுடில்லியில் முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இதில் நடிகர்கள் அஜித்குமார், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தார்.

