நடிகர் ரோகித் பாஸ்ஃபோர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பாலிவுட்டில் ஃபேமிலி மேன், ஃபேமிலி மேன் 2 மற்றும் ஃபேமிலி மேன் 3 என்று 3 சீசன்கள் இந்த வெப் தொடர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ராஜ் அண்ட் டிகே இந்த வெப் சீரிஸ்களை இயக்கியிருக்கிறார். ஸ்பை த்ரில்லர் கதையை மையப்படுத்த இந்த வெப் சீரிஸானா, ‘ஃபேமிலி மேன் 3’ யில் நடித்தவர் ரோகித் பாஸ்ஃபோர்.

இவர் மர்மமான முறையில் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் கர்பங்கா பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ரோகித் பாஸ்ஃபோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இவரது உடலை மீட்ட பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதாவது, கடந்த 27ஆம் திகதி அசாம் மாநிலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நண்பர்களுடன் இவர் டூர் சென்றுள்ளார். அப்போது அந்த நாள் பிற்பகல் வரையில் அவர் குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அதன் பிறகு அவர் குடும்பத்தினர் உட்பட யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ரோகித் பாஸ்ஃபோர் உடல் காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது விபத்தாக இருக்க கூடும் என பொலிஸார் சந்தேகித்த நிலையில், ரோகித்தின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அவரது உடலில் பல இடங்களில் ஆயுதங்களால் தாக்கியது போன்ற  காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறி இருந்துள்ளது.

கவுகாத்தி மருத்துவமனையில் ரோகித்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடற்கூறு மருத்துவர்களின் கூற்றுப்படி முகம், தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. இந்த காயங்களை வைத்து பார்க்கும் போது இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக அவர்கள் கூறியதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் கார் பார்க்கிங்கின் போது ரோகித் பாஸ்ஃபோருக்கும், அசோக் பாஸ்ஃபோர் , ரஞ்சித் பாஸ்ஃபோர் மற்றும் தரம் பாஸ்ஃபோர் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக இவர்கள் மீது ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு ரோகித்தை சுற்றுலா அழைத்துச் சென்ற அமர் தீப் மீதும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நால்வரை இப்போது பொலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *