வாகரை பால்ச்சேனையில் தேர்தல் பரப்புரைக் கூட்டம்

திசைகாட்டி அரசாங்கத்தால் இனிமேல் யாருக்குமே ஆட்சி பொறுப்பை வழங்கப்போவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு நாட்டை அமைத்துக் கொடுத்து விட்டே நாங்கள் விடைபெறுவோம். நாங்கள் நல்லமில்லாமல் விட்டால் எங்களை விட நல்லவர்களிடம் ஆட்சியை கொடுங்கள். அனுரகுமார திசநாயக்க நல்லவர். இல்லையென்றால் ரணில் விக்கிரமசிங்கவையோ அல்லது மகிந்த ராஜபக்சவையோ திருப்பி எடுக்கமுடியாது. அனுரதோழரை விட நல்ல மனிதரைத்தான் நீங்கள் எடுக்கவேண்டும். எங்களைவிட திறமையான அமைச்சர்களைதான் தெரிவு செய்யவேண்டும் என கைத்தொழில் அமைச்சர் சுனில்ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டம் வாகரை பால்ச்சேனையில் இடம்பெற்றது. அங்கு தேர்தல் பரப்புரை அலுவலகத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களுக்கான அரசாங்கம் இன்று உள்ளது. சட்டம் சமமாக உள்ள அரசாங்கம் உள்ளது. யாருமே பயப்படத் தேவையில்லை.வேலை எடுப்பதற்கு எந்தவொரு அமைச்சரினதும் சிபாரிசு கடிதம் தேவையில்லை. அலுவலகங்களுக்கு சென்று உங்கள் சேவைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் அதற்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்.எங்களது வெற்றிக்குப் பிறகும் நாங்கள் இங்குள்ள தோழர்களுடன் தான் இருக்கப் போகிறோம். நாங்கள் நிதிகளை ஒதுக்கி உங்கள் கிராமத்தை அபிவிருத்தி செய்வோம் யாரும் பயப்படத்தேவையில்லை.

நாங்கள் நல்லவர்கள் இல்லையென்றால் எங்களை விட நல்லவர்களைத்தான் தெரிவு செய்யவேண்டும். வடக்கு மக்களும்  தெற்கு மக்களும் தங்களது நாட்டை உருவாக்க வேண்டும் என்று தான் போராட்டம் செய்தனர். நியாயமான உண்மையான நாட்டை உருவாக்கவே போராடினார்கள். இன்று அப்படியான நாடுதான் இங்கு உள்ளது. வடக்கையும் தெற்கையும் ஒரேமாதிரியாக பார்க்கும் தலைவரே இப்போதுள்ளார். வடக்கிற்கு கிடைக்கும் உதவியைப் பார்த்து தெற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.

அதேபோன்று தெற்கிற்கு கிடைப்பது பற்றி வடக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இது இனவாதம் இல்லை சமதர்மம் என்பது பற்றி அவர்களுக்கு தெரியும். இதுதான் எங்களது எதிர்பார்ப்பாகும். அரசாங்கத்தை கட்டியெழுப்பியது போன்று அழகானதொரு பிரதேசபையை உருவாக்க வேண்டும். அதற்காக திசைகாட்டி சின்னத்திற்கு வாக்களித்து திசை காட்டி அரசாங்கத்திற்கு இந்த பிரதேச சபையை பாரம் கொடுப்போம்.

இங்குள்ள தோழர்களுக்கு வாக்களிப்போம். உங்களுக்கு வலிமையும் அசுர பலமும் கிடைக்கவேண்டும் என்று வேண்டி விடைபெறுகிறேன் என்றார்.

இவருடன் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் ஊடகத்துறை பொறுப்பாளர் சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினரான சதீஸ் செல்வராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி மன்றத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான க. திலிப்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *