2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் 102,387 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
40 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
மாற்றுவலுவுள்ளோருக்கான ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தனியார் துறைகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கு சட்ட விதிகளுக்கு அமைய தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் விடுமுறைகளை வழங்கி ஊழியர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சுயாதீனமான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.