எனது மகனை சுட்டு படுகொலை செய்த பொலிஸாரை பாதுகாக்காது மகனுக்கு நீதியைப் பெற்றுத் தர இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சிறுவனுக்கு நீதி கோரியும், சிறுவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்யக் கோரி யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் நிறைவில், உயிரிழந்த சிறுவன் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது கணவர் மதுவுக்கு அடிமையானதால், எமது குடும்பத்தை மூத்த மகனே உழைத்து பார்த்தார், மேசன் வேலை, மாட்டெரு ஏற்றி விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் சிறுவயது முதல் ஈடுபட்டு, அந்த வருமானத்தில் தான் எனது ஏனைய 05 பிள்ளைகளையும் கல்வி கற்க வைத்து, எமது குடும்பத்தையும் பார்த்தார்.
அவர் எந்த ஒரு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டவர் இல்லை. அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர் எனில் பொலிஸ் நிலையங்களிலோ, நீதிமன்றங்களிலோ வழக்குகள் இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு எதிராக எந்தவொரு வழக்குகளும் இல்லை.
சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் ஓடியதால் தான் பொலிஸார் மறிக்கும் போது நிறுத்தவில்லை. விபத்துக்களை கூட ஏற்படுத்தவில்லை. வாகனத்தை மகன் நிறுத்திய பின்னரே பொலிஸார் சுட்டுள்ளனர்.
இருவர் சுட்டதாக கூறுகின்றனர். ஆனால் ஒருவரே மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று வாக்கு மூலம் அளித்துள்ளார். மற்றையவர் இது வரையில் செல்லவில்லை.
எனது மகனை சுட்டு கொலை செய்த பொலிஸாரை காப்பாற்ற பலரும் முயல்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் பேசவில்லை. எனது மகனுக்கு இந்த அரசாங்கமே நீதியை பெற்று தர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

