ரூ. 1 கோடி பெறுமதியான 91 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை மீறி, அவ்வாணைக்குழுவின் அனுமதியின்றி சட்டவிரோதமாக குறித்த கையடக்கத் தொலைபேசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இலங்கையரை விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 12 இல் வசிக்கும் 40 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று(07) காலை 8.35 மணிக்கு துபாயிலிருந்து வந்த ஈகே-650 எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
தம் வசம் வைத்திருந்த 2 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 91 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகளை அவர் எடுத்துச் செல்ல முற்பட்டபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் சோதனையிடப்பட்ட அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

