2009 ம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடர் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் போராளிகள் இன்னும் முழுமையாக அரசியல் மயப்படவில்லை என்பதே. அதனால் முன்னாள் போராளிகள் அரசியல் மயப்பட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுவித்துள்ளார்.
இன்று(22) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவருமான வேந்தன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவம் வகிக்கும் அணைத்து இயக்கங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கான அடக்குமுறைகள் மற்றும் அவர்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது.
அதே போல் 12000ற்கு மேற்பட்ட புனர் வாழ்வு பெற்ற போராளிகள் வடக்கு கிழக்கு முழுவதும் காணப்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் இன்னும் பல அரசியல் அடக்கு முறைகள் மற்றும் புலனாய்வுத் துறையினரின் பின் தொடரும் தன்மைகள் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதனை நிறைவுக்குக் கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து தமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாகத் தந்துள்ளது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியே ஆகும்.
பல கட்சிகளில் பல முன்னாள் போராளிகள் இருந்தாலும் அவர்கள் இன்னொருவருக்கான அரசியல் அங்கிகாரத்திற்காக செயற்பட்டு வருகின்றனர். இந்த நிகழ் காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகளின் ஒரே தெரிவாகவே காணப்படுகிறது.
அதனால் அனைத்து புனர்வாழ்வு பெற்ற போராளிகளும் ஓரணியில் திரண்டு தமக்கான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

