ஏறாவூர்ப் பற்று பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கள விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று(03) பல்வேறு சமூக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்து கொண்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

முதற்கட்டமாக, ரமேஷ்புரம் மற்றும் கணபதி நகர் அறநெறி பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் இடம்பெற்றது.

அத்துடன், சவுக்கடி கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு, அவர்களது குடியிருப்புப் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் இன்றி வாழ்ந்து வந்த நிலைமையை கருத்தில் கொண்டு, உரிய அரச அதிகாரிகளுடன் இணைந்து நேரடி கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விஜயத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும், மாவடிவேம்பு கிராமத்திற்கு மயானம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாகவும் அரச அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிராம சமூக மட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மயானத்திற்குப் பொருத்தமான காணி அடையாளம் காணப்பட்டு, அதனை சட்ட ரீதியாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, மாடிவேம்பு – 2 கிராமத்திற்கு ஒன்று கூடல் மண்டபம், சிறுவர் பூங்கா மற்றும் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாகவும் நேரடி கள விஜயம் இடம்பெற்றது. குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர்ப் பற்று பிரதேச மக்களின் நீண்டநாள் தேவைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *