காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (05) இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அழைப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் ஆரம்பத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதுடன் அதனைத்தொடர்ந்து இதுவிடயமாக தெளிவுபடுத்தப்பட்டபின் இக்கூட்டம் ஆரம்பமானது.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அபிவிருத்தி திட்டங்கள், தோணா கால்வாய் விடயம், மத்திய கல்லூரி மதில் உடைப்பு விவகாரம், இலங்கை மின்சார சபை, ஆதார வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை, அஸ்வெசும, சமுர்த்தி வாழ்வாதார திட்டம், இலங்கை போக்குவரத்து சபை போன்ற விடயங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
பண்முகப்படுத்தப்பட்ட நிதியூடாக மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள், அபிவிருத்தித்திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள் தொடர்பாகவும், சுற்றுலா படகுச்சேவை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் குறித்தும் இதன்போது அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ .எம். ஹிஸ்புல்லா ,பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ், தேசிய மக்கள் சக்தி காத்தான்குடி இணைப்பளர் பிர்தௌஸ் நளீமி, நசீர், காத்தான்குடி நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், நகர சபை செயலாளர், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

