கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்றுமுன்தினம்(13) கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது.
மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தெரிவுகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதனும், உப தவிசாளராக புஸ்பநாதன் சிவகுமாரும், பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சனும், உப தவிசாளராக திருமதி.  குணலக்சுமி குலவீரசிங்கமும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேனும், உப தவிசாளராக சிவகுரு செல்வராசாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தெரிவுகள் தொடர்பிலான மாவட்டக்கிளையின் எழுத்துமூல தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனால் கட்சியின் பதில் தலைவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *