ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் எம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர். எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை.

எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது. குடிநீரை வெளியே உள்ள தாங்கியில் இருந்துதான் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும். முற்பகல் 10 மணியானதும் நாங்கள் எடுத்துச் செல்லுகின்ற குடிநீரோ அல்லது தாங்கியில் உள்ள குடிநீரோ மிகவும் சூடாகி காணப்படும், ஆகையால் நாங்கள் அதனை குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது, 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதைவிட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர். மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகளோ, பாதுகாப்புக் கவசங்களோ வழங்கப்படுவதில்லை.

ஒரு ஊழியர் உப்பளத்தில் வேலை செய்யும்போது இறந்தால்கூட எமது பணத்தில் தான் அவரது சடலத்தை கொண்டு செல்ல வேண்டும், அவரது கண்ணீர் அஞ்சலி பத்திரிகைகள் கூட எமது பணத்தில் தான் வெளியிட வேண்டுமே தவிர நிறுவனம் எமக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது.

இந்த உப்பளத்தை திறந்து வைக்கும் போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறினார், ஆனால் எமக்கு பின்னர் வழங்கப்பட்டது 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே.

அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே அளவான போனஸ் கொடுப்பனவே வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகிறது. ஆனால் இங்கு எமது வரவினைப் பார்த்து, மிகவும் குறைந்த போனஸ் தொகையே கொடுப்பார்கள். வேலைக்கு வராதது எமது பிழை அல்ல. எமக்கு சுழற்சி முறையிலான வேலையையே வழங்குகின்றனர். ஆகையால் நாங்கள் எப்படி ஒழுங்காக வேலைக்கு வருவது?

எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை. ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள். இது அரச நிறுவனம் போல் இல்லாது முதலாளித்துவத்துடன் கூடிய தனியார்  நிறுவனம் போலவே செயற்படுகிறது.

பெண் ஒருவர் தினமும் 65 அந்தர் (3250 கிலோ) உப்பு அள்ள வேண்டும் என கூறி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர்.

இலாபத்தை பகிர்ந்து அளிப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அதனை பகிர்ந்து வழங்குவதற்கு யாரும் தயாராக இல்லை, அந்த இலாபத்தை எமக்கு பகிர்ந்தளிக்கின்றனர் இல்லை.

இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டபோது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்களை கதைப்பதற்கு உள்ளே அழைத்தனர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட ஊழியர்களும் உள்ளே சென்றோம். ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. உள்ளே சென்று கலந்துரையாடியபோது அவர்கள் எங்களது பிரச்சினைகளை கருத்தில் கொள்ளவில்லை. நாங்கள் மண்வெட்டி பிடி திருடினோம், உப்பு திருடினோம் என்று பொய்யான குற்றச்சாட்டு கூறுகின்றார்களே தவிர எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது போல் தெரியவில்லை.

இது பார்ப்பதற்கு வெளியே ஒரு தேசிய உப்பளமாக காணப்பட்டாலும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *